Friday, June 12, 2009

கலைஞர்பேரரிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்திய போது மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து


'தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திடவேண்டு' மென்றாள்.
'தங்கம் எடுக்கவா' என்றான்;
'தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க' என்றாள்.
'இன்றென்ன ஆயிற்' றென்றான்
'குன்றனைய மொழிக்கு ஆபத்' தென்றான்;
'சென்றடையக் குடிலில்லை ஏழைக்' கென்றான்;
'கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்' றென்றாள்;
'அறிவில் - கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
'அம்மா நான் எங்கே பிறப்ப' தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமேல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே 'கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக' என்றாள்,
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னாக - பொதிகைமலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பட்டாய்
வந்துதித்தான் அண்ணன் - கீழ்
வானுதித்த கதிர்போல -
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை
தலைவவென்பார், தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார் நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே
'அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம்
போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்போப்புக்கும் சிலை;
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததினால் - அண்ணன்
தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய;
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது. . .
ஆட்காட்டி விலல் மட்டும் காட்டி நின்றார் . . .
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஓர்விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா . . . இதயமன்னா . . .
படைக்கஞ்சார் தம்பியுன்டென்று பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய் . . . ?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போற் விட்டாய்; நியாந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கோண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று மண் மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதும் அண்ணா;
எழுந்து வா எம் அண்ணா . . .!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்கத் தெரியும் அண்ணா . . . நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . !
(பேரரிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்திய போது
கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)

No comments: